கருப்பசாமி பாண்டியன் முன்ஜாமீன் மனு மீண்டும் தள்ளிவைப்பு
நெல்லை: பாலியல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தாக்கல் செய்த மனு தள்ளி வைக்கப்பட்டுளளது.
இந்த நிலையில் புகார் கூறிய தமிழரசி தன்னையும் எதிர்மனுதாரராக சேர்க்க கோரி புது மனு தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கருப்பசாமி பாண்டியன். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், நெல்லையை சேர்ந்த நாலடியார் மகள் தமிழரசி கொடுத்த பாலியல் புகாரில் பேரில் என் மீது குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திமுக உள்கட்சி தேர்தலில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா மீது கட்சி மேலிட தலைவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனால் மாலை ராஜா தமிழரசியை தூண்டி விட்டு என் மீது பாலியல் புகார் கொடுக்க செய்துள்ளார்.
அவர் கூறியது போன்று எந்த சம்பவமும் நடக்கவில்லை. இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்ய வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிடி செல்வம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருப்பசாமி பாண்டியன் சார்பில் ஆஜாரான வக்கீல் ஆனந்த் மனுதாரர் மீது பொய்யான புகார் தரப்பட்டுள்ளது. தேவையில்லாமல் செய்தி பெரிதுப்படுத்தப்படுகிறது என்றார்.
இந்த நிலையில், புகார்தாரர் தமிழரசி நேரில் ஆஜராகி வழக்கில் என்னையும் எதிர்மனுதாரராக சேர்த்து எனது விளக்கத்தையும் கேட்க வேண்டும் என்றார். இதனை ஏற்று கொண்ட நீதிபதி மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அப்போது குற்றாலம் இன்ஸ்பெக்டர் மன்னவன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கருப்பசாமி பாண்டியன் தமிழரசியிடம் தவறாக நடந்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது. வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்து விசாரணை நடத்த வேண்டி உள்ளது. மனுதாரர் அரசியல் பலம் மிக்கவர் என்பதால் முன்ஜாமீ்ன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து முன் ஜாமீன் மீதான விசாரணை மீண்டும் நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டது.