ஆந்திராவில் பிறந்து சென்னை மருத்துவமனையில் ஏமன் மனிதருக்கு உயிர் கொடுத்த “இதயம்”!
சென்னை: ஆந்திராவில் சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த இளைஞரின் இதயம் விமானத்தில் பறந்து வந்து சென்னையில் ஏமன் நாட்டு முதியவர் ஒருவருக்கு உயிர் கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீதர், பொறியியல் பட்டதாரி. இவர் 2 நாட்களுக்கு முன் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் மாலை அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஸ்ரீதரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ளவர்களுக்கு உடல் உறுப்புகள் தேவைப்படுகிறதா என்று மருத்துவமனை டாக்டர்கள் பார்த்தனர். கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை ஆந்திர மாநிலத்தில் உள்ளவர்களுக்கு தேவைப்பட்டது.
சென்னை அடையாறு மலர் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இதயம், நுரையீரல் தேவைப்படுவது தெரியவந்தது. அதை தொடர்ந்து நேற்று காலை விமானம் மூலம் மலர் மருத்துவமனை டாக்டர்கள் ஸ்ரீநாத், முரளி தலைமையிலான குழுவினர் விஜயவாடா சென்றனர்.
நுரையீரல் சேதம் அடைந்து இருந்ததால், இதயத்தை மட்டும் பெற்று கொண்ட மருத்துவ குழுவினர் ஐதராபாத் விமான நிலையத்தை அடைந்தனர். மாலை 4.35 மணிக்கு புறப்பட்ட விமானம் சென்னை விமான நிலையத்திற்கு 6 மணிக்கு வந்தடைந்தது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் 9 நிமிடங்களில் மலர் மருத்துவமனைக்கு இதயம் வந்தடைந்தது.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்த ஏமன் நாட்டை சேர்ந்த 60 வயது முதியவரை இதயவியல் துறை இயக்குனர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், துறை தலைவர் டாக்டர் கே.ஜி.சுரேஷ்ராவ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வந்தனர். இதயம் மருத்துவமனையை அடைந்ததும் உடனடியாக முதியவருக்கு அதனை பொருத்தும் பணி தொடங்கியது. இது தங்கள் மருத்துவமனையின் 52 ஆவது உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.