இறந்தும் துடிக்கும் “இதயம்”- விமானத்தில் பறந்து வந்து வாழ்க்கை கொடுத்த “வேலூர்” செல்வராம்!
வேலூர் : வேலூர் அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் சென்னையில் இருவேறு மருத்துவமனைகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் 4 பேர் புது வாழ்க்கை பெற்றுள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராம். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவரது மனைவி கவிதா. செல்வராம் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
மனைவி கவிதா பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கணவனை காண அவர் வேலூர் வருவாராம்.
வாகனம் மோதி படுகாயம்
இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அதிகாலை வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகரில் செல்வராமின் பெரியம்மா இறந்து விட்டார். இதற்காக அரப்பாக்கத்தில் உள்ள உறவினரை அழைத்து வர பைக்கில் புறப்பட்டார். பெருமுகை அருகே சென்றபோது, ஒரு வாகனம் மோதி செல்வராம் படுகாயம் அடைந்தார்.
மூளைச்சாவு நிலை
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் செல்வராம் மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக டாக்டர்களிடம் உறவினர் கூறினர்.
பிரிக்கப்பட்ட இதயம்
இதையடுத்து அவரது இதயம் மற்றும் சிறுநீரகத்தை கொண்டு செல்வதற்காக சென்னையில் இருந்து மருத்துவக்குழுவினர் ஹெலிகாப்டரில் வந்தனர். அவர்கள் வந்த ஹெலிகாப்டர் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் தயாராக காத்திருந்தது. 8 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் இதயம் மற்றும் ஒரு சிறுநீரகத்தை பிரித்தெடுத்தனர்.
விமானத்தில் பறந்த இதயம்
அங்கிருந்து சரியாக மாலை 3.38 மணிக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ் 6 நிமிடத்தில் விஐடி பல்கலைக்கழகம் ஹெலிபேடை அடைந்தது. அங்கு தயாராக இருந்த சென்னை மலர் மருத்துவமனை டாக்டர்கள் குழு, உடல் உறுப்பு பெட்டியை பெற்றதும், அடுத்த நிமிடமே சென்னையை நோக்கி ஹெலிகாப்டர் பறந்தது. சரியாக 4.30 மணியளவில் உடல் உறுப்பு பெட்டி சென்னை விமான நிலையம் வந்தது. அப்போது, விமான நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில் உடல் உறுப்பு பெட்டி ஏற்றப்பட்டு சரியாக 4.40 மணியளவில் மலர் மருத்துவமனை வந்தடைந்தது.
வெற்றிகர அறுவை சிகிச்சை
மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்சில் இருந்து இறக்கப்பட்டதும் உடனடியாக அவசர அறுவை சிகிச்சை பிரிவுக்கு உடல் உறுப்பு கொண்டு செல்லப்பட்டு அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினருடன் உடல் உறுப்பு ஒப்படைக்கப்பட்டு, 34 வயது ஆணுக்கு அந்த இதயத்தை வெற்றிகரமாக பொருத்தினர். உடல் உறுப்பு கொண்டு வரப்பட்ட ஒரு மணி நேரத்தில், சிஎம்சி முதல் வேலூர் விஐடி வரையும், சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து மலர் மருத்துவமனை வரையும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.