2 நாளைக்கு தகிக்கப் போகுது தமிழகம்... வெளியே வந்தா வெந்து போயிருவீங்க- எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
சென்னை: தலைநகர் சென்னை மேலும் கொதிக்கப் போகிறது. 100 டிகிரி பாரன்ஹீட் அளவை விட அதிகமாக வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. 28வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆங்காங்கே கோடை மழை கொட்டியதால் வெப்பத்தின் தாக்கம் தெரியவில்லை. பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரிக்கும் குறைவாகவே பதிவானது.
இந்த நிலையில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் 2 நாட்களுக்கும் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வறண்ட வானிலையே நிலவுகிறது என்றும், சென்னையிலும் வெப்பம் 105 டிகிரிவரை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வயதானவர்கள், குழந்தைகள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், பத்திரமாக வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆறுதல் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.