என்னா வெயில்!.... இப்பவே கண்ணைக் கட்டுதே!! வெப்ப மயக்கத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?
சென்னை: சித்திரை மாசம்தான் கத்திரி வெயில் கண்ணைக் கட்டும். ஆனால் இந்த ஆண்டு மாசியிலேயே தொடங்கி விட்டது வெயியின் தாண்டவம். அடித்து ஆடும் வெயிலுக்கு வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அச்சப்படுகின்றனர். விளம்பரத்தில் வருவது போல சூரியன் ஸ்டிரா போட்டு உடம்பில் உள்ள நீரை எல்லாம் உறிஞ்சுவதால் முதியவர்கள் பலரும் நீர்ச்சத்து குறைந்து வெப்ப மயக்கத்திற்கு ஆளாகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாகவே சென்னை சாலைகளில் காணல் நீரோடியது. விடுமுறை நாள் என்பதால் வெயிலுக்கு அஞ்சி பலரும் வீடுகளிலேயே முடங்கி விட்டதால் வாகனப் போக்குவரத்தும் குறைந்து விட்டது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பாலைவனத்துக்கு நிகரான வெப்பம் தற்போது உணரப்படுகிறது. கோடையின் முக்கிய நாட்கள் வருவதற்கு முன்பே, வெப்பத்தின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. வெயில் காலத்தில் சாப்பிட உணவுகள், மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெப்பத்தின் தாக்கத்தினால் சிலருக்கு வெப்ப மயக்கம் ஏற்படும். வெயிலினால் வீசும் அனல் காற்றுக்கு ஆந்திராவில் இரு நாட்களில் வயல்வெளியில் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் மயங்கி விழுந்து 11 பேர்வரை இறந்துள்ளனர்.
வெய்யிலின் உக்கிரத்தால், தோலிலுள்ள ரத்தக்குழாய்கள் மிக அதிகமாக விரிவடைந்து, இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி வகுக்கிறது. இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்து, ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை. இதன் விளைவாக வெப்ப மயக்கம் ஏற்படுகிறது. வெயில் காலத்தில் வெப்ப மயக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அனலால் அவதி
தமிழகத்தில் சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை நிலவுகிறது. மதுரை, வேலூர், சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் வெப்பத்தின் உக்கிரத்தால் சாலைகளில் மக்கள் நடக்க முடியாமலும், இரவில் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வெயிலால் மின் பயன்பாடும் அதிகமாகி, இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்படத் தொடங்கி உள்ளது.
சதமடிக்கும் வெயில்
வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். ஆனால், நடப்பு ஆண்டில் பிப்ரவரி இறுதியில் இருந்தே வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தமிழகத்தின் பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிக வெப்பநிலை பதிவானது.
10 ஆண்டுகளில் இல்லாத வெயில்
சென்னை வானிலை மையத்தின் புள்ளி விவரங்களின்படி, வழக்கமாக ஏப்ரல் இறுதி அல்லது மே மாதங்களில் தான் மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கும் மேலான வெப்பநிலை பதிவாகும். ஆனால், நடப்பு ஆண்டில் மார்ச் 15 ஆம் தேதியில் இருந்தே 100 டிகிரி பாரன்ஹீட்-க்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது.
மதுரையில் 106 டிகிரி
இதில் கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகபட்சமாக மார்ச் 23 ஆம் தேதி அன்றுதான் 106 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. நடப்பு மார்ச் மாதத்தில் தான் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் மார்ச் 23ம் தேதி பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக, 2013 மார்ச் 30 ஆம் தேதி 103 டிகிரி பதிவானதே உச்சகட்ட வெப்பநிலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரையும் மார்ச் வெப்பநிலையும்
2006 - 99 டிகிரி (மார்ச் 28), 2007 - 100 டிகிரி (மார்ச் 26), 2008 - 94 டிகிரி (மார்ச் 28), 2009 - 100 (மார்ச் 2), 2010 - 102 டிகிரி (மார்ச் 31), 2011 - 98 டிகிரி (மார்ச் 31), 2012 - 102 டிகிரி (மார்ச் 22), 2013 - 103 டிகிரி (மார்ச் 30), 2014 - 102 டிகிரி (மார்ச் 30), 2015 - 101 டிகிரி(மார்ச் 24). வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வெப்ப மயக்கம்
வெயிலில் அதிக நேரம் வேலை செய்தாலே, நடந்து சென்றாலோ வெப்ப மயக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். கோடையில், 2 மணி நேரத்துக்கு மேல், தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். முதியவர்கள், குழந்தைகள், உடல்நலம் குறைந்தோர் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். அவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப மயக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மருத்துவ உதவி
மயக்கம் ஏற்பட்டவரை, குளிர்ச்சியான இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அவர்களின் ஆடைகளைத் தளர்த்தி, உடல் முழுவதும் காற்றுபடும்படி செய்யவேண்டும். தண்ணீரில் நனைத்த துணியால் உடல் முழுவதும் ஒற்றியெடுத்துத் துடைக்க வேண்டும். அவருக்குக் குளுக்கோஸ், சலைன் செலுத்த வேண்டியதும் முக்கியம். உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
பருத்தி ஆடைகள்
கோடை காலத்தில் இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தைக் கிரகிக்கும். ஆகவே, இத்தன்மையுள்ள ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளையும் தவிர்க்க வேண்டும்.
கார உணவுக்கு நோ
கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சூடான, காரமான, மசாலா கலந்த உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்றவைகளை தவிர்ப்பதே நல்லது.
கூழ் குடிங்க
இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், ஆகிய உணவுகளை உட்கொள்ளலாம். கேப்பைக் கூழில் தயிர்விட்டு சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும். காரணம், கேப்பைக் கூழுக்கும் தயிருக்கும் உடலின் வெப்பத்தை உறிஞ்சக்கூடிய தன்மையுண்டு.
நீர்ச்சத்து அவசியம்
கோடை வெப்பத்தால் வியர்வையில் பொட்டாசியம் வெளியேறிவிடும். இதனால் உடல் களைப்படைந்து, தசைகள் இழுத்துக்கொள்ளும். அப்போது, இப்பழங்களில் உள்ள பொட்டாசியம் அந்த இழப்பை ஈடுகட்டும். கோடையில் வெப்பத் தளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க, பொட்டாசியம், நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிடலாம்.
பழங்கள்
வெயில் காலத்தில் தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலா பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடி உட்கொள்ளுங்கள். இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமுள்ளது.
காய்கறிகள்
மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி, தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத் தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளி கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவு வகைகள் என்கின்றனர் மருத்துவர்கள்.