சுட்டெரிக்கும் வெயில்...திருச்சி, சேலம், மதுரையில் 103 டிகிரி.. புலம்பும் மக்கள் !
சென்னை: தமிழகத்தில் திருச்சி, சேலம், மதுரை உள்பட 4 நகரங்களில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே மாசம் தான் கத்திரி வெயில் கண்ணை கட்டும் ஆனால் இந்தாண்டு ஏப்ரல் மாதத்திலே வெயில் மண்டையை பொளக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் பகல் நேரத்தில் அனல் காற்றையும் மக்கள் அனுபவிக்கின்றனர். வெளியில் தலை காட்ட முடியாத நிலை. வீட்டுக்குள்ளும் வெக்கை அதிகம்.
என்ன செய்வது எனது தெரியாது மக்கள் புலம்புகின்றனர்.
சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், பிற்பகல் முதலே அனல் காற்றின் தாக்கமும், புழுக்கமும் காணப்படுகிறது. மார்ச் மாதம் முதல் பல நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில், மீண்டும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய 4 நகரங்களில் அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. அதற்கு அடுத்தப்படியாக திருப்பத்தூர், தருமபுரி, வேலூர், கோவை ஆகிய நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பதிவான வெயில் நிலவரம்
(டிகிரி ஃபாரன்ஹீட்டில்):
திருச்சி 103
சேலம் 103
மதுரை 103
பாளையங்கோட்டை 103
திருப்பத்தூர் 102
தருமபுரி 102
வேலூர் 102
கோவை 101
சென்னை மீனம்பாக்கம் 95