இனி சூரியன் சுள்ளுனு சுடாதாம்... சூடு கொஞ்சம் கம்மியா இருக்குமாம்!
தமிழகத்தில் வெப்பநிலை இனி இயல்பான நிலைக்குத் திரும்பும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 10 தினங்களாக சுட்டெரித்த சூரியன் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும், அதே நேரத்தில் வட தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கூறியுள்ளார்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி பல்வேறு இடங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. வெப்பம் 120 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும் என்று வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினார்கள். கடந்த 19ஆம் தேதி வெப்ப அலை வீசியது. பல மாவட்டங்களில் 110 டிகிரி வெப்பம் பதிவானது திருவள்ளூரில் 113 டிகிரி வெப்பம் பதிவானது.
நூற்றாண்டுகளில் இல்லாத வெயில்
சென்னையில் கடந்த திங்கட்கிழமை 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. இதுவே கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான 11 ஆண்டுகளில் சென்னையில் ஏப்ரல் மாதத்தில் பதிவான வெப்ப அளவுகளில் அதிகமாகும். இதற்கு முன்பு 2016 ஏப்ரல் 23ஆம் தேதி 105 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரையில் கடந்த 1908ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி பதிவான 109 டிகிரி வெயிலே அதிகபட்ச அளவாகும்.
மாருதா புயல்
இந்த நிலையில் மாருதா புயல் காரணமாகவும், மேற்கு திசையில் இருந்து வீசிய வெப்பம் நிறைந்த தரைக்காற்று காரணமாகவும் கடந்த சில நாட்களாக அதிக வெப்பமாக இருந்தது. தினசரியும் வெயில் செஞ்சுரி அடிப்பதால் வெயிலுக்கு பயந்து மக்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு செல்லத் துவங்கியுள்ளனர்.
குளுமை தேடும் மக்கள்
வெயிலில் இருந்து தப்பிக்க குளிர் பானம், ஐஸ் கிரீம், இளைநீர் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்வதையும் தவிர்த்து வருகின்றனர். அதே வேளையில் குடி நீர் தட்டுபாடும் தலைவிரித்து ஆடுகின்றனர். மனிதர்கள் மட்டும் இன்றி வனவிலங்குகளும் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சூடு கம்மியாகும்
தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் வழக்கமாக நிலவும் வெப்பத்தைவிட இந்தாண்டு அதிகமாக வெயில் கொளுத்தியது. தற்போது புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மேற்கு தரைக்காற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் வெப்பம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வெப்பக்காற்று
ஆந்திர பகுதியில் இருந்து தொடர்ந்து தரைக்காற்று வீசுவதால் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மட்டும் மேலும் சில நாட்களுக்கு வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். பின்னர் அங்கும் குறைந்துவிடும். கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பம் இனி தொடர வாய்ப்பில்லை. கோடை காலத்தில் எந்த அளவுக்கு இருக்குமோ அதே நிலைக்கு வெப்பம் இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு இல்லை
ஒருவேளை மே மாதத்தில் மேற்கு தரைக்காற்று வீசினால் வெப்பம் சற்று அதிகரிக்கும். அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர பிற இடங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.