அனல் காற்று வீசும்... சென்னையில் சாரல் மழை பெய்யும் - வானிலை எச்சரிக்கை
தமிழகத்தின் வட மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் சென்னையில் லேசான சாரல் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஆந்திராவில் அதிக பட்ச வெப்பம் பதிவாகி வருகிறது. ஆந்திராவில் இருந்து வீசும் காற்றினால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பம் பதிவாகி வருகிறது என்றார்.
அனல் காற்று வீசும்
வடதமிழகத்தின் உட்பகுதிகளில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும். தமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் ஒருநாளைக்கு வெப்பம் கடுமையாக நீடிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னையில் சாரல்
சென்னையில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் ( 40 டிகிரி செல்சியஸ்) சென்னையில் ஒரு சில இடங்களில் மழை தூரல் இருக்கும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.
தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சதமடித்த வெயில்
சென்னையில் காலையில் சாரல் மழை பெய்தாலும் பல பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாகவே பதிவாகியுள்ளது. இன்று திருத்தணியில் அதிகபட்சமாக 111 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை, திருச்சி, கரூர், வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல நகரங்களில் 107 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
முடங்கிய மக்கள்
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். வயதானவர்கள், முதியவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.