கொளுத்தும் வெயில்... கோடை விடுமுறை முன்கூட்டியே விட முடிவு - செங்கோட்டையன்
தமிழகம் முழுவதும் பல மாநிலங்களில் வெப்பக்காற்று வீசுவதால் முன் கூட்டியே கோடை விடுமுறை விட திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளில் கோடை விடுமுறை முன் கூட்டியே விட திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21ஆம் தேதிக்கு மேல் கோடை விடுமுறை விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து விட்டன. அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு இன்னமும் தேர்வுகள் முடியவில்லை. மாணவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி வெந்து வருகின்றனர். இன்னமும் ஒரு தேர்வு பாக்கி இருக்கிறது.
மாணவர்கள் ஒரு பக்கம் வகுப்பறைகளில் வெந்து போக, ஆசிரியர்களும் வியர்வையில் குளிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் வெயிலின் வேகத்தை கவனத்தில் கொண்டு ஏதோ போனால் போகிறது என்று ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
அமைச்சர்களே, பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குநர்களே... அடுத்த ஆண்டு முதலாவது விரைவில் முடிவெடுத்து விடுமுறையை அறிவியுங்களேன் என்பது மாணவர்களின் கோரிக்கையாகும்.