பவானி ஆற்றில் மணல் எடுத்தால் கடும் நடவடிக்கை: பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
பவானி ஆற்றில் மணல் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஈரோடு: பவானிசாகர் அணையில் வண்டல்மண் எடுப்பதை தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானிசாகர் அணைப்பகுதியில் தற்போது தண்ணீர் குறைவான அளவில் உள்ளது.இதனை பயன்படுத்தி அணையினை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவை ஆளும் கட்சியினர் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.மேலும் அதிகாரிகள் துணையோடு ஆளும் கட்சியினர் சிலர் சட்டவிரோதமாக மணல் எடுப்பதாக கூறி கிராமமக்கள் லாரிகளை சிறைபிடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளை மீட்டனர்.
இந்நிலையில் பவானிசாகர் அணைப்பகுதியில் வண்டல் மண் உரிய அனுமதியுடன் எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணிதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் வண்டல்மண்ணை லாரியில் ஏற்றுவதற்காக மட்டும் பொக்லைன் இயந்திரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 106 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் இவ்வாறு வண்டல் மண் எடுப்பவர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அணையில் தண்ணீர் இல்லாததை பயன்படுத்தி அதில் பயிர்சாகுபடி செய்துள்ளவர்கள்தான் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுவதால் அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.