ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்... முண்டியடிக்க முடியாமல் ஜன்னல் வழியாக என்ட்ரி!
தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் நிலையங்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
நெல்லை, மதுரை, திருச்சி, கோவை, குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தீபாவளி, பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அதனால் சென்னையில் உள்ள மக்கள் ரயில், பஸ்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுகின்றனர்.
ரயிலை விரும்பும் பயணிகள்
மிக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் பேருந்து பயணத்தை விட ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். அலுப்பில்லாமல் குறைந்த கட்டணத்தில் தூங்கிக் கொண்டே செல்லும் வகையில் ரயிலில் வசதிகள் உண்டு.
சிறப்பு ரயில்கள்
தீபாவளி பண்டிகைக்கு கூட்ட நெரிசலில் மக்கள் அவதிஅடையாமல் இருக்க தமிழக அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்கி வருகிறது. அதேபோல் ரயில்வே நிர்வாகமும் கூடுதல் ரயில்களையும் இயக்கியும், கூடுதல் பெட்டிகளை இணைத்தும் பயணிகளுக்கு உதவி வருகிறது.
போலீஸார் ஒழுங்குப்படுத்துவர்
ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட ஊருக்கு செல்லும் ரயில்கள் வருவதற்கு ஓரிரு மணி நேரங்களுக்கு முன்பே பயணிகள் குழந்தை குட்டிகள், மூட்டை முடிச்சுகளுடன் காத்திருப்பர். அதன்பின்னர் ரயில் வந்தவுடன் தங்களுக்கான இருக்கையை பிடிப்பதற்காக அவர்கள் முண்டியடிப்பர். ரயில்வே போலீஸார் ஒழுங்குப்படுத்தினாலும் அதெல்லாம் வேலைக்கு ஆகாது. முண்டியடித்து செல்பவர்களுக்குத்தான் சீட்டு கிடைக்கும்.
ஜன்னல் வழியே ஏறும் நபர்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக ரயில் நிலையம் முழுவதும் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஒரு சிலர் ஜன்னல் வழியாக ஏறி சீட்டுகளை போடவும் முயற்சிக்கின்றனர். இத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் தீபாவளி பண்டிகைக்கு ஊரே புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்துக் கொண்டு இருக்கும் காலை வேளையில் தூக்க கலக்கத்துடன் சென்று தனது தாய்,தந்தை, மனைவி, மக்களுக்கு வாங்கி வந்த துணிமணிகளையும், பட்டாசுகளையும் கொடுப்பதில் இருக்கும் ஆனந்தம் வேறெதிலும் இல்லை என்கின்றனர்.