சென்னை அருகே 28 கிராமங்களை சுற்றி வளைத்த வறட்சி.. மரணத்தின் விளிம்பில் ஆடு, மாடுகள்!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியைச் சுற்றி உள்ள 28 கிராமங்களில் கடுமையான வறட்சி நிலவுவதால் ஆடு மாடுகள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியைச் சுற்றி உள்ள 28 கிராமங்களில் கடுமையான வறட்சி நிலவுவதால் ஆடு மாடுகள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னையில் வசிக்கும் பொது மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 ஏரிகளில் 11.05 டிஎம்சி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
பருவ மழை பொய்த்து போனதாலும், கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையிலிருந்து வரவேண்டிய தண்ணீர் வரத்து நின்று போனதாலும், புழல் தவிர மற்ற 3 ஏரிகள், தற்போது முழுவதுமாக வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கின்றன.
பூண்டி ஏரி உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் ஷட்டர்கள் வழியாக தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.
கொசஸ்தலை கரைகளில் 300 கிராம்கள்
அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், தாமரைபாக்கம், அணைகட்டு பகுதிகள் வழியாக பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. பூண்டி ஏரியிலிருந்து வங்கக் கடல் வரை சுமார் 55 கிலோ மீட்டர் தூரம் வரை கொசஸ்தலை ஆற்றின் இருபுறங்களில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
வற்றிய கொசஸ்தலை
மழை பொய்த்து போனதால் கொசஸ்தலை ஆறும் வற்றிவிட்டது. ஆற்றங்கரையில் உள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் ஆழ்துளை கிணறுகள் வற்றி விட்டன. இதனால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
காண கிடைக்காத குடிநீர்
குறிப்பாக பூண்டி அருகே உள்ள அரியத்தூர், நம்பாக்கம், ராஜபாளையம், ஆற்றம்பாக்கம், மோவூர், திருக்கண்டலம், அணைகட்டு, புன்னபாக்கம், செம்பேடு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் வராததால் பொது மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
அன்றாடம் போராட்டம்
குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் பூண்டி, எல்லாபுரம், புழல், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வரும் சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
நூற்றாண்டு காணாத வறட்சி
தமிழகத்தில் 140 ஆண்டுகளில் காணாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. பூண்டி ஏரி சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முழுவதுமாக வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.
28 கிராமங்கள் தவிப்பு
பூண்டி ஏரியை சுற்றி 28 கிராமங்கள் உள்ளன. இங்கு கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள விவசாயிகள் ஆடு மற்றும் மாடுகளை ஏரி பகுதியில் மேய்க்க விட்டுவிடுவது வழக்கம். கோடை வெயில் மற்றும் பருவ மழை பொய்த்து ஏரி வறண்டு விட்டதால் ஆடு, மாடுகள் கூட தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றன.
இறக்கும் தருவாயில் ஆடு மாடுகள்
மேய்ச்சல் இல்லாமல் ஆடு, மாடுகள் இறக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் ஆடு, மாடுகளை விற்று வருகின்றனர். இதற்கு மாற்று என்ன என்று தெரியாமல் அவர்கள் தவிக்கிறார்கள். அவர்கள் மீது கவனம் வைக்குமா தமிழக அரசு?