கொள்ளிடம் ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்.. வெள்ளப் பெருக்கை காண குவிந்த பொதுமக்கள்
கொள்ளிடத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
Recommended Video
திருவையாறு: கொள்ளிடம் ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் கொள்ளிடம் ஆற்று வெள்ளப்பெருக்கைக் காண பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால், காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து வருகிற உபரி நீர் அப்படியே காவிரியில் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது. அதே போல, கேரளா அணையிலிருந்து திறக்கப்படும் நீரும் காவிரியில் கலந்து மேலும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதனால், காவிரியில் 2.50 லட்சம் கன அடி நீர் வரத்து ஏற்பட்டு வெள்ளப் பெருக்கு காரணமாக 90 ஆண்டு பழமை வாய்ந்த திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பழைய பாலம் இடிந்து விழுந்தது.
காவிரியின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரியின் கிளை ஆறு கொள்ளிடத்திலும் நீர் திறக்கப்பட்டு 2.50 லட்சம் கன அடி நீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொள்ளிடம் ஆற்றில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் வெள்ளப் பெருக்கைக் காண பொதுமக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், திருவையாறு விலாங்குடியிலிருந்து அரியலூர் மாவட்டம் திருமானூரை இணைக்கும் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளப் பெருக்கை கண்டு கண்டு மகிழ்ந்தனர். சிலர் தங்களுடைய மொபைல் போன்களில் வீடியோ, போட்டோ எடுத்துக்கொண்டனர்.
அங்கே வெள்ளப் பெருக்கை காண வந்த ஒருவர் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் இதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதன் பிறகு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படாது. ஆனால், இந்த ஆண்டு பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கைக் காண குடும்பத்துடன் வந்துள்ளோம். கொள்ளிடத்தில் இந்தளவுக்கு வெள்ளப் பெருக்கைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார்.
விலாங்குடி - திருமானூர் கொள்ளிடம் பாலத்தில் வெள்ளப் பெருக்கை காண வந்த மற்றொருவர் கூறுகையில், கொள்ளிடத்தில் 2.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் மொத்த தண்ணீரும் கடலில் கலக்கப் போகிறது என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் தமிழக அரசு சிறிய அளவிலான தடுப்பனைகளைக் கட்டி பாசனத்துக்கு பயன்படுத்த வேண்டும்" என்று கூறினார்.