சென்னையில் ராம்குமார் பிரேதப் பரிசோதனை.. சொந்த ஊரில் போலீஸ் குவிப்பு #ramkumar
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள ராம்குமாரின் சொந்த ஊரில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறும் நிலையில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சாப்ட்வேர் பொறியாளர் சுவாதி கொலைவழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தை சார்ந்த பரமசிவம் என்பவரது மகன் ராம்குமார் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த 18ம் தேதி சிறைக்குள்ளேயே மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் மற்றும் சிறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரம் பரபரபப்பானது. தொடர்ந்து பதட்டத்துடன் இருந்து வருகிறது. அவரது உறவினர்கள் ராம்குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி 19ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் அவரது உடல் இன்று சென்னையில் உடல் கூறு செய்யப்படும் நிலையில் இங்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்ப்படாவண்ணம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் தலைமையில் செங்கோட்டை, கணக்கபிள்ளை வலசை, பன்பொழி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.