சென்னை: நாளை முதல் 4 நாட்களுக்கு விநாயகர் சிலை கரைப்பு - பலத்த பாதுகாப்பு
சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளைக் கரைக்கும் நிகழ்ச்சி நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும், அறிவுரைகளையும், வழி காட்டு நெறிமுறைகளையும் இதற்காக வழங்கியுள்ளது. பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகளை எந்த இடத்தில் கடலில் கரைக்க வேண்டும் என்றும் முறைப்படி காவல்துறை அறிவித்துள்ளது.
9ம் தேதி விநாயகர் சதுர்த்தி
கடந்த 9ம்தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தியை மக்கள் கொண்டாடினர்.
சென்னையில் 1705 இடங்களில் சிலை வைப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் 1705 இடங்களில் உரிய அனுமதி பெற்று சிலைகள் வைக்கப்பட்டன. அனுமதி பெறாமலும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று முதல் கரைப்பு
இதுபோக வீடுகளிலும் மக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். நேற்று முதல் அவற்றை நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
நாளை முதல் பெரிய சிலைகள்
இந்த நிலையில் நாளை முதல் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்கவுள்ளனர். நான்கு நாட்கள் இது நடைபெறவுள்ளது.
சிவசேனா
நாளை சிவசேனா சார்பி்ல வைக்கப்பட்டுள்ள சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ளது.
அடுத்து இந்து முன்னணி
அடுத்த நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கடலில் கரைக்கப்படவுள்ளன. அமைப்பாளர் ராம கோபாலன் தலைமையில் இந்த விநாயகர் ஊர்வலம் நடைபெறுகிறது.
18ம் தேதி வரை
இதுபோல பல்வேறு அமைப்புகள் சார்பில்வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி 18ம்தேதி வரைநடைபெறவுள்ளது.
பலத்த பாதுகாப்பு
சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைப்பு நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்புக்கும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மாட்டுவண்டிகளில் ஊர்வலம் கூடாது
மாட்டு வண்டிகளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பல கட்டுப்பாடுகளையும், உத்தரவுகளையும் காவல்துறை அறிவித்துள்ளது.
இரவிலும் விநாயகருக்கு காவல் காத்த பெண் காவலர்கள்
விநாயகர் சிலைகளுக்கு காவலாக காவல்துறையினர் ஷிப்ட் போட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெண் காவலர்களும் அடக்கம். அவர்களில் பலர் இரவு நேரத்திலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது.