தமிழகம் முழுக்க வெளுத்தெடுக்கும் மழை... வாக்குப் பதிவு மந்தம்!
சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் இன்றைய தேர்தலில் வாக்குப் பதிவு மந்தமாகவே நடந்து வருகிறது.
காலை 7 மணிக்கு தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவு தொடங்கியது. அதே நேரம் மழையும் ஆரம்பித்துவிட்டது.
#TamilNaduElection : CM Jayalalithaa casts her vote at Chennai's Stella Maris College pic.twitter.com/CeZfGTvZdA
— ANI (@ANI_news) May 16, 2016
சென்னையில் டிசம்பர் பெரு வெள்ளத்துக்குப் பிறகு இப்போதுதான் மழை பெய்கிறது. மிரட்டலாக ஆரம்பித்த மழை சிறிது நேரத்தில் தூறலாகக் குறைந்துவிட்டது. காலை 9 மணியிலிருந்து மப்பும் மந்தாரமுமாகவே உள்ளது.
திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று காலையும் தொடர்ந்தது. திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் கோடை மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்றுமுதல் மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று காலை தேர்தல் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
நெல்லை, மதுரை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. வாக்களிப்பதில் ஆர்வமுள்ள மக்கள் குடைகளோடு காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
கோவை, நீலகிரி உள்பட 15 மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால் வாக்களிப்பில் மந்தமான நிலை நிலவுகிறது.