வார இறுதி, திடீர் மழை.. சென்னை நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது!
சென்னை: வார இறுதி மற்றும் மழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடும் டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாளை முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பல்வேறு நகரங்களுக்கு தமிழக அரசு சார்பில் 980 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் கோயம்பேட்டில் மாலை முதல் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் நகரின் கோயம்பேடு, அண்ணாநகர், வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்தது. மழை காரணமாக இயல்பாக ஏற்படும் டிராபிக் நெரிசல், மாலை வேளையில் ஏற்படும் இயல்பான நெரிசல் ஆகியவற்றோடு, பயணிகளின் கூட்ட நெரிசலும் சேர்ந்ததால் நகரின் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் பஸ்களை பிடித்துவிட முடியுமா என தெரியாமல் டிராபிக் நெரிசலில் சிக்கிய பயணிகள் விழி பிதுங்கிப்போயினர். பதற்றமும் பரபரப்பும் அவர்களை சூழ்ந்திருந்தது.
கிண்டி, உதயம் தியேட்டர், வடபழனி ஏரியாக்களில் கடும் நெரிசல் ஏற்பட்டநிலையில், பெருங்களத்தூர் முதல் பொத்தேரி எஸ்ஆர்எம் யுனிவர்சிட்டி வரை மிக கடுமையான நெரிசல் இருந்தது.
இதேபோலத்தான் கோயம்பேடு-வேலூர்-பெங்களூர் சாலையும் இருபுறமும் நெரிசலால் விழிபிதுங்கி நிற்கிறது. மதுரவாயல், பூந்தமல்லி, திருமழிசை வரை மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. குறிப்பாக கோயம்பேடு நோக்கி வரும் சாலைகள் மிக மோசமாக நெரிசலால் பாதிக்கப்பட்டுள்ளன.