காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை... வேகமாக நிரம்பும் கர்நாடக அணைகள்
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பெங்களூரு: காவிரி நீர்பிடிப்பு இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரளா மாநிலம் வையநாடு சுற்று வட்டாரத்திலும் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் கர்நாடக மாநிலம் கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களாக அணைக்கு 1000 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு முதல் 13,600 கனஅடி அளவுக்கு நீர் வரத் தொடங்கியுள்ளது.
அதேபோல குடகு, சாம்ராஜ் நகரில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 124 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் அணைகள் வேகமாக நிரம்புகின்றன. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் பவானி சாகர் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 40.52 அடியாக உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பாளையம், பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல் கடந்த 5 நாட்களாக வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் 13 அடி உயர்ந்துள்ளது.