சென்னை மற்றும் புறநகர்களில் கனமழை.. குரோம் பேட்டையில் இடியுடன் பேய்மழை!
சென்னை: சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் தணிந்து திடீர் மழை பெய்து சட்டென்று வானிலையை மாற்றியது. குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டி வருகிறது. நாகை, அரியலூர் மாவடங்களிலும் கனமழை கொட்டியது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், பள்ளிக்கரனை, நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்கிறது. கடும் வெயிலுக்கு பின் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் சுத்தமல்லி பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது.