கனமழையால் மிதக்கும் வேளச்சேரி.... நீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்றுநோய் அபாயம்
சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருவதால் சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. நேற்று வீடுகளில் தண்ணீர் வடிந்த நிலையில் இன்று பெய்துவரும் மழையால் மக்கள் மீண்டும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் அனைத்து பகுதிகளிலும் மழை விடாமல் விடிய விடிய பெய்து வருகிறது. ஒரு வாரத்திற்கு மேலாக பெய்த தொடர் மழை காரணமாக சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று பகல் நேரத்தில் அதிக மழை இல்லாததால் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் வடிய தொடங்கியது.
ஆனால் நேற்று நள்ளிரவு முதல் அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, வண்டலூர். தாம்பரம், பல்லாவரம், கிண்டி, நுங்கம்பாக்கம், சேத்துபட்டு போன்ற இடங்களில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் குளம்போல் தேங்கியுள்ள தண்ணீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி அங்காங்கே குளம் போல காட்சி அளிக்கிறது. பல இடங்களில் மழை நீருடன் சாக்கடை தண்ணீர் கலந்து வீடுகளுக்கு புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சரியான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் வேளச்சேரியின் பல இடங்களில் 2 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
மழை நீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்களுக்கு தோற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.