அடித்து நொறுக்கிய மழையால் திக்குமுக்காடிப் போன தென் மாவட்டங்கள்
நெல்லை: தென் அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்துவரும் மழையின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், தமிழக-கேரளா எல்லைப்பகுதிகளிலும் கடுமையான பாதிப்புகள் ஏறப்பட்டுள்ளன.
பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. மின்சாரம் தாக்கி 2பேர் பலியாகியுள்ளனர். மணிக்கணக்கில் அங்கு மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது
நெல்லை, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்குப் பருவமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த சீசனில் முழுமையாக மழை பெய்யவில்லை.
புதிய புயல் சின்னம்
இருப்பினும் தமிழகத்தில் தென் கடலோரப் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தற்போது கன மழை கொட்டி வருகிறது.
குற்றாலத்தில் வெள்ளம்
இந்த மழையின் காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கடந்த 22ந் தேதி இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேற்று இரவு குளிக்க தடை விதிக்கப்பட்டு இன்று காலை முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் வந்தாலும் அஞ்சாத மக்கள்
அருவிகளில் நேற்று முழுவதும் தடை நீடித்தது. இருப்பினும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரியில் விடிய விடிய மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் தொடங்கிய மழை காலை வரை நீடித்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. குடிநீர் வழங்கும் முக்கடல் அணையில் ஒரே நாளில் ஐந்து அடி தண்ணீர் உயர்ந்தது.
200 படகுகள் அடித்துச் செல்லப்பட்டன
தேங்காப்பட்டணத்தில் குழித்துறையாறு கடலில் கலக்கும் பொழிமுகம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 200 படகுகள் கடலில் அடித்து செல்லப்பட்டது. மீனவர்கள் அந்த படகுகளை மீட்டு கரை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 20க்கும் மேற்ப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
திற்பரப்பில் குளிக்கத் தடை
திற்பரப்பு அருவில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 16 மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறது.
2 பேர் பலி
இம்மழை காரணமாக ஆரல்வாய்மொழியில் செங்கல் சூளை நடத்தி வரும் நாகர்கோவில் மண்டையம்மன்கோயிலை சேர்ந்த சுகுமாரன் என்பவர் அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் பாய்ந்து இறந்தார். இதுபோல நித்திரைவிளையை சேர்ந்த வினேஷ் என்பவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
தென்மலை நீர்த்தேக்கம்
தென்மலை நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் மேற்கே நோக்கி பாயும் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழக கேரளா எல்லையான ஆரியங்காவு ,கழுதுருட்டி ,தென்மலை பகுதிகளில் நேற்று காலையும், இரவுநேரத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டு வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 6மணிநேரம் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.
கேரளாவில் பலத்த மழை
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழையின் காரணமாக வெள்ளம் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் சேதமடைந்தும், பள்ளிகள், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. விளையாட்டு மைதானங்கள் வெள்ளநீரால் முழ்கியுள்ளன.