கன மழை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் கன மழை தொடருவதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருந்தது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று நகர்ந்து தெற்கு இலங்கைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகம், புதுவையின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழையோ மிக பலத்த மழையோ இன்று பெய்யும். உள்மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.