தென் மாவட்டங்களில் காணாமல் போன அக்னி நட்சத்திரம்... கொட்டித் தீர்க்கும் மழை!
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அக்னி நட்சத்திரம் என்ற ஒன்றே இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
4வது நாளாக இன்று காலையும் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதி்க்கபபட்டுள்ளது. குற்றால அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வெயில் பொது மக்களை வாட்டி வதைத்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பல அணைகள் வறண்டன. இதனால் குடிநீர் கிடைக்காமல் போகுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 2 நாளுக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமரி மையம் கொண்டதை அடுத்து நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் 4வது நாளாக இன்று காலையும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக குற்றாலம், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் இரவு முழுவதும் கன மழை போன்றும் இல்லாமல், லேசான தூறலும் இல்லாமல் மத்திம நிலையிலான பரவலான மழை பெய்து கொண்டே இருந்தது. வானத்தில் சூரியனையே காணமுடியவில்லை. மாவட்டத்தில் பல பகுதிகளில் கன மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
இந்ததொடர் மழை காரணமாக வறண்ட பல அணைகள் வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளன. சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 47.51 அடியாகவும், ஆனால் இதர பல அணைகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அந்த அணைகளில் நீர்மட்டம் 2 அடிகள் குறைந்துள்ளது.
மணிமுத்தாறு 61.35, பாபநாசம் அணை நீர்மட்டம் 32.25, கடனா நதி 25, கருப்பா நதி 25.36 அடியாகவும் உள்ளன. குண்டாறு அணையில் 14.10லிருந்து 15.08 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்றுதான் அக்னி வெயில் தொடங்கியது. ஆனால் அதற்கான அறிகுறியே தெரியவில்லை.
கன மழை காரணமாக மின் நுகர்வு கணிசமாக குறைந்துள்ளதால் மின்தடை நேரமும் குறைந்துள்ளது.