தொடர் மழை எதிரொலி - பல லட்ச ரூபாய் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்
தொடர் மழை காரணமாக கோவில்பட்டியில் தேங்கியுள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.
தூத்துக்குடி: ஓகி புயலால் மழை கொட்டி தீர்த்ததால் தீப்பெட்டி பண்டல்கள் கோவில்பட்டியில் தேங்கி கிடக்கின்றன. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் விவசாயத் தொழில் முன்னணி வகிக்கிறது. அதற்கு அடுத்தது தீப்பெட்டி தொழில் இருந்து வருகிறது. கோவில்பட்டி நகரம், கழுகுமலை, வானரமூட்டி, நாலாட்டின்புதூர், முடுக்குமீட்டான்பட்டி, பாண்டவர் மங்கலம், இலுப்பையூரணி, கடலையூர், துறையூர் உள்பட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் கையினால் செய்யும் தீப்பெட்டி தொழில், மற்றும் பகுதி நேரி இயந்திர தீப்பெட்டி, முழு நேர இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இதில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் தீப்பெட்டி பண்டல்கள் லாரிகள் மூலம் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக பண்டல்கள் விலை மட்டுமின்றி ஜிஎஸ்டி வரி விதிப்பால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை கொட்டி வந்ததால் தீப்பெட்டி உற்பத்திக்கான கெமிக்கல் மருந்துகளை உலர வைக்க முடியவில்லை.
வடமாநிலத்தில் இருந்த பெறப்பட்ட ஆர்டர்களை உரிய நேரத்தில் அனுப்ப முடியாமலும், ஏற்கெனவே உற்பத்தி செய்த பண்டல்களை லாரிகள் மூலம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் லட்ச ரூபாய் மதிப்பிலான பண்டல்கள் தேங்கி கிடப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.