எஸ்.ஆர். ரமணன் கன மழை பெய்யும்னு சொன்னாரு.. மழை நின்னே போச்சு!
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதாகவும், இதனால் இன்று வட கடலோர மாநிலங்களில் கன மழை பெய்யும் என்றும் நேற்றுதான் எஸ்.ஆர்.ரமணன் கூறியிருந்தார். ஆனால் இன்று படிப்படியாக மழை குறைந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னையில் காலையிலிருந்தே மழையைக் காணோம்.
நேற்று சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறுகையில், வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு நோக்கி நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் வடக்கு இலங்கைக்கும், தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியிலும் நீடிக்கிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வடக்கு நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஆந்திரா மற்றும் ஓடிசாவில் அடுத்த சில நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறுமா? என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்யக்கூடும். தரைக்காற்று வழக்கமாக வீசுவதை விடவும் சற்று பலமாக வீசும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 44 செ.மீ. சராசரியாக பெய்யும். நேற்று வரையிலான நிலவரப்படி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 42.5 செ.மீ. அளவுக்கு பதிவாகி உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் பற்றாக்குறையான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நாளை முதல் மழை குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் கூறுகையில், வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து புவனேஸ்வர் நோக்கி செல்கிறது. இதன் காரணமாக தமிழகம் - புதுச்சேரியில் மழை படிப்படியாக குறையும். அதேசமயம் காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டது.