கர்நாடகத்தில் செம மழை... ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி: கர்நாடகத்தில் காவிரி நீர்ப்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட பெரும்பாலான அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளிலிருந்து சனிக்கிழமை திறந்து விடப்பட்ட உபரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நேற்று வந்தடைந்தது.
இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக நீர் வரத்து குறைவாக காணப்பட்ட ஒகேனக்கல் அருவியில், தற்போது நீர்வரத்து கூடுதலாக உள்ளது. ஒகேனக்கல்லில் சனிக்கிழமை நொடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று மாலை நிலவரப்படி அருவியில் நொடிக்கு 11,500 கன அடி நீர் வருவதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.