தொடர் மழை... பெருக்கெடுத்த வெள்ளம் - கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
தேனி: தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தொடர் மழை கும்பக்கரை அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத் தீவு, மாலத்தீவு பகுதியை நோக்கி நகரும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் மழை
தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குமுளி, தேக்கடி, முல்லைப்பெரியாறு அணை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.
தண்ணீர் பிரச்சினையில்லை
தேனி மாவட்டம் கம்பம், போடி சுற்று வட்டாரப்பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே வெயில் தகித்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளதால் பொது மக்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடந்த சில நாட்களுக்கு முன்பாக வறண்டு போயிருந்த கும்பக்கரை, சுருளி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். கும்பக்கரை அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.