கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் - அணைகளில் நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அணைகளில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இதனால் அடுத்த 36 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சுமார் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கொட்டித்தீர்த்த கனமழை
மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளம் குறைந்த பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அருவிகளில் குளிக்க வந்த ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் படிகளில் வெள்ள நீர் ஓடிவருவதில் பலரும் குளித்து மகிழ்ந்தனர்.
100 ஆண்டுகள் பழமையான மரம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாதர் சாமி கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள 100 ஆண்டிற்கு மேற்பட்ட பழமையான மருத மரம் ஒரு வீட்டின் மேல் விழுந்தது வீடு சேதம்
அடைந்தது. ஆனாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை.
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் களக்காடு அருகே உள்ள தலையனையிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
பாபநாசம் காரையார் அணையில் நீர் மட்டம் 107.45அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் நீர் மட்டம்121.36அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையில் நீர் மட்டம் 90.25அடியாக உள்ளது. 85 அடி அளவுள்ள கடனாநதி அணையில் நீர்மட்டம் 84 அடியாக உள்ளது. இராம நதி அணையில் நீர்மட்டம் 67.50அடியாக உள்ளது. அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.