கடலோர மாவட்டங்களில் இன்று மழை... வானிலை மையம்
சென்னை: மத்திய வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
வியாழக் கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக் கல்லாரில் 80 மி.மீ. மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஆலங்காயம், திருப்பத்தூர், சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய இடங்களில் 50 மி.மீ. மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், தேனி, தருமபுரி, கடலூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
கடற்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.