வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. செப்டம்பர் மாதம் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதுபோல அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதனிடையே வங்கக் கடலில் தென்மேற்கு திசையில் நிலைக் கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, சற்று மேற்கு திசையில் நகர்ந்து, தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வருவதால் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தலா 6 செமீ மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 5 செமீ மழையும், வேலூர் மாவட்ட சோளிங்கர், கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் 4 செமீ மழை பெய்துள்ளது