2 நாட்களுக்கு கனமழை கொட்டப்போகுதாம்... எச்சரிக்கும் வானிலை மையம்
வடதமிழகத்தின் சில இடங்களில் கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
சென்னை: வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் வடதமிழகத்தின் சில இடங்களில் இன்று கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மத்திய மேற்கு வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆந்திரா கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்கிறது. நேற்றும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னையில் இன்று காலை லேசான சாரல் மழை பெய்தது. இதனால் வழக்கத்தைவிட காலை நேரத்தில் குறைந்த வெப்பநிலை பதிவாகி, இதமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மழை நின்றுவிட்ட நிலையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், மத்திய மேற்கு வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார்.
செப்டம்பர் 27ம் தேதி வரை வட தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களிலும், தென்தமிழகத்தின் சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, அதன்சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.