தமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை.. சேலத்தில் சூறை காற்றில் சிக்கி பெண் பலி
கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் தமிழகத்தில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்தது.
சேலம்: தமிழகத்தில் திருச்சி, திருப்பூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சேலம் அருகே சூறை காற்றில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் கோடை காலத்தின் உச்சமான 'அக்னி நட்சத்திரம்' தொடங்கி வெயில் வறுத்தெடுத்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் வெயில் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனிடையே கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கா கனமழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரத்தில் நேற்று சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதேபோல் கரூர், குளித்தலை, நாமக்கல், ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் காற்று இடியுடன் கூடிய மழை கொட்டியது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம், தில்லை நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சுமார் 1 மணி நேரமாக மழை பெய்தது. திருவெறும்பூர், கூத்தைப்பார், நடராஜபுரம், அரங்குடியில் கனமழை பெய்தது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முசிறி, தா.பேட்டை, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. வேலூர், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மேட்டூர், மேச்சேரி, கொளத்தூர் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
ஆத்தூர் அடுத்த தெடாவூரில் காற்றின் வேகத்தில் சிக்கி தென்னை மரத்தின் மீது தூக்கி வீசப்பட்ட மகேஷ்வரி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மழையால் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 2 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.