வால்பாறையில் கனமழை… பள்ளிகளுக்கு விடுமுறை… குற்றாலத்தில் குளிக்கத்தடை
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு அங்கிருக்கும் சோலையாறு அணை நிரம்பி வருகிறது.
இதனிடையே ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையால் விடுமுறை
இந்நிலையில் வால்பாறையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3வது நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் இன்று காலை வெளியிட்டார்.
நீலகிரியில் பாதிப்பு
கோவை, நீலகிரி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
உதகமண்டலம், நடுவட்டம், கூடலூர், தேவாலா, பந்தலூர், முதுமலை, அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இந்த மழை காரணமாக அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, காமராஜ் சாகர், பார்சன்வேலி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதே போல உதகைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொட்டபெட்டா, லேயர் தொட்டபெட்டா, டைகர் ஹில், கோடப்பமந்து, மாதுளமந்து ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கடும்குளிர்
தொடர் மழையால் ஊட்டியில் கடும் குளிர் நிலவுகிறது. மரங்கள் விழுந்து அவ்வப்போது மின் தடை நிலவுகிறது. இதனால் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
மண்சரிவு
பந்தலூர் தாலுகா தேவாலா அருகே சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையின் ஓரமாக இருந்த தடுப்புச்சுவரும் இடிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மேலும் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை முற்றிலும் துண்டிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
வெள்ளப்பெருக்கு
ஆனைமலை, ஆழியாறு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
குற்றாலத்தில் வெள்ளம்
குற்றாலம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு போலீஸார் தடைவிதித்தனர்.
அருவிகளில் பெருகிய தண்ணீர்
குற்றாலம், தென்காசி பகுதியில் கடந்த இரு தினங்களாகப் பெய்துவரும் சாரல் மழை காரணமாக பேரருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, நள்ளிரவு 12 மணிமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர்.
தடை விதித்த காவல்துறை
தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணிமுதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் ஒரு மணியளவில் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியது. இதையடுத்து, அருவியின் மையப் பகுதிக்கு யாரும் செல்லமுடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தி, ஓரமாக நின்று குளிக்க போலீஸார் அனுமதித்தனர்.
பயணிகள் ஏமாற்றம்
சிறிது நேரத்தில் தண்ணீரின் சீற்றம் அதிகமானதையடுத்து பேரருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் பிற்பகல் 3 மணிமுதல் தண்ணீர் அதிக அளவில் கொட்டியதையடுத்து, அங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.