மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை... குற்றாலம் அருவிகளில் ஜில்லுன்னு கொட்டுது தண்ணீர்
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை இல்லாததால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவி களுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
இதனால் போதிய தண்ணீர் வரத்து இல்லாமல் அருவியில் நீர்வரத்து முற்றிலும் குறைந்து நேற்று காலையில் பாறையை ஒட்டி தண்ணீர் வீழ்ந்தது. இந்நிலையில் நேற்று மாலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் விடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் மாலையில் குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து மெயினருவியில் ஆர்ச்சைத் தொட்டு தண்ணீர் கொட்டுவதால் மெயினருவியில் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஆண்களும், பெண்களும் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீரில் ஆனந்தமாக குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். இன்று முதல் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.