தணிந்தது வெப்பம்... கோடை மழை நீடிக்கும் - வானிலை மையம்
தமிழகத்தில் வெப்பம் தணிந்து கோடை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல் போன்ற இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் முதலே வெப்பம் தகித்த நிலையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறைவாகவே வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்தடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 9 செமீ நாங்குநேரியில் 5 செமீ, வால்பாறையில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்றும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.