தமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்
சென்னை: தமிழகத்தில் வரும் 17ம் தேதி மற்றும் 21 , 22ம் தேதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் தமிழகத்திற்கான மழை முன்னெச்சரிக்கை குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் செவ்வாய்கிழமை (17ம்தேதி) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேபோல் 17ம் தேதி அன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதனிடையே இன்று தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் , கேரளா மற்றும் தமிழக எல்லையை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
கனமழைக்கு வாய்ப்பு
தர்மபுரி, சேலம், நாமக்கல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வானிலை எப்படி
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.
வானிலை மையம்
இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகம் மற்றும் கேரள எல்லையையொட்டி நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்திருக்கிறது.
கன மழை
சென்னை, திருச்சி, ஈரோடு, தூத்துக்குடி, தர்மபுரி, தஞ்சாவூர், கரூர், நீலகிரி, திருப்பூர், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருவள்ளூர், திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் நேற்றிரவு மழை பெய்திருக்கிறது. வருகிற 20, 21-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உருவாகி வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து வருவதை பொறுத்து மழையின் அளவு அமையும். தென் தமிழகத்தில் அதிக மழை பெய்யுமா? அல்லது வட தமிழகம் வரை மழை இருக்குமா? என்பது 2 நாட்களில் தெரியவரும் என்றார்.
24 மணி நேரத்தில்
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் நதியானர் அணையில் 9 செமீ மழை பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 6 செமீ மழையும் தர்மபுரி மாவட்டம் அரூர் தஞ்சை மாவட்டம் வல்லூர் ஆகிய இடங்களில் 5 செமீ மழை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம், திருப்பூர் மாவட்டம் மூலனூர், தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி ஆகி யஇடங்களில் 3 செமீ மழை பெய்துள்ளது.