காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை... ஒகேனக்கலில் தண்ணீர் கொட்டுகிறது.. சுற்றுலா பயணிகள் குஷி
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் நேற்று பலமணிநேரம் பலத்த மழை பெய்தது.
ஒகேனக்கல்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வறண்டு கிடந்த அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எப்போதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி பகுதிகள் கடந்த சில மாதங்களாக வெறும் பாறைகளாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகல் ஏமாற்றமடைந்தனர்.மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் சுத்தமாக நின்று போனது.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் மற்றும் அஞ்செட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதேபோல் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் குடகு மலைபகுதிகளிலும் கனமழை கொட்டியது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி ஆற்றிலும் புது வெள்ளம் சீறிப்பாய்கிறது.
ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர சுமார் 6 மணி நேரம் ஆகும். தற்போது காவிரி ஆறு வறண்டு காணப்படுவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர்
வர மேலும் சில மணி நேரம் தாமதம் ஆகும். இதனால் இன்று மாலைக்குள் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.