வங்கக் கடல் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்தது.. சென்னையில் விடாமல் அடை மழை
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்துள்ளது. நாளை இது தாழ்வ மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மேலும் வலுவடைந்தால் புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னையிலும் பல கடலோரப் பகுதிகளிலும் விடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை நகரை விட புறநகர்ப் பகுதிகளில்தான் மழை விடாமல் தொடர்ந்து வெளுத்தெடுத்து வருகிறது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த, காற்று மேலடுக்கு சுழற்சி, காற்று அழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்திருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக நாளை காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் தமிழ்நாடு, புதுவையில் பலத்த மழை மற்றும் மிக பலத்த மழை பெய்யும்.
நாளை காலை 8.30 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்தில் மிக பலத்த மற்றும் அளவுக்கு அதிகமான பலத்த மழை பெய்யும். காற்றழுத்த மண்டலம் புயலாக மாறுமா? என்பதை கண்காணித்து வருகிறோம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மழை பெய்து வருவதைப் பார்த்தால் இது புயல் சின்னமாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அந்த அளவுக்கு விடாமல் நேற்று இரவு முதல் சென்னைப் புறநகர்களிலும், சென்னையிலும் மழை வெளுத்தெடுத்து வருகிறது.
சென்னை தவிர கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு முக்கியச் சாலைகள் வெள்ளக்காடாகியுள்ளன. குறிப்பாக ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியது.
மழை அளவு
இன்று காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக நாகையில் 81.7 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் மீனம்பாக்கத்தில் 43.4 மி.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 14.8 மி.மீ. மழையும் பெய்துள்ளது.