மறுபடியும் கன மழை.. மீண்டும் வெள்ளக்காடான தமிழகம்..!
சென்னை: தமிழகம் மீண்டும் வெள்ளக்காடாகி வருகிறது. மறுபடியும் பெய்து வரும் கன மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கடலூரிலும் வெள்ளக்காடாகியுள்ளது.
நாகை மாவட்டத்தில் விடாமல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது.
அதேபோல கடலூரிலும் வெள்ளப் பெருக்காகியுள்ளது. அங்கு, கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக அணையின் பாதுகாப்பு நலன் கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கோமுகி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் எச்சரித்து பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு எச்சரித்துள்ளது.
சென்னையில் விட்டு விட்டு மழை
சென்னையிலும், புறநகர்களிலும் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர்களில் கன மழை பெய்தது. பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், மீண்டும் வெள்ளக்காடாகின.
இரவில் பலத்த மழையை சென்னை புறநகர்ப் பகுதிகள் கண்டன. இரவெல்லாம் பெய்த மழையால் பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னை நகரிலும் முக்கியச் சாலைகளில் நீர் தேங்கி மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
வேளச்சேரியில் தம்பதி பலி
சென்னை வேளச்சேரியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தம்பதி உயிரிழந்தனர். அஷ்டலட்சமி நகரில் கடைக்கு சென்ற போது மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவி பலியாகினர். தம்பதியின் இருகுழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செங்குன்றம் ஏரி (புழல் ஏரி) நேற்று முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து ஏரியில் இருந்து 70 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் தொடர்ந்து கன மழை பெய்து கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் தூத்துக்குடி தாலுகாவுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.