கனமழையால் பெரம்பலூரில் 25 ஆயிரம் ஹெக்டேர் பருத்தி பயிர்கள் நாசம்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த பருத்திப் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் வரட்சிப்பகுதி என்பதால் விவசாயிகள் பெரும்பாலும் மானாவரி பயிர்களான பருத்தி, மக்காச்சோளம்,மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை பயிரிட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவ மழை தவறாமல் பெய்ததால் பருத்தி,மக்காச்சோளம்,சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். தற்போது பருத்தி,மக்காச்சோளம் ஆகியவை அறுவடைக்கு தயாராக இருந்தன.
ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பருத்தி வயல்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியது.இதையடுத்து, வேர் அழுகல் நோய் ஏற்பட்டு புதிதாக காய்த்திருந்த பருத்திக் கைகள் அனைத்தும் விளையாமல் அழுகிக் கொட்டியது. சாகுபடி செய்யப்பட்டிருந்த ஒட்டுமொத்த பருத்திச் செடிகளும் அழுகி நாசமாந்தால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் , 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் வருமானத்தை இழந்து தவிப்பதாகவும் பருத்தி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.