வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் கனமழை - வானிலை மையம்
வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஸ்டெல்லா கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஸ்டெல்லா கூறியுள்ளார்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் விட்டு விட்டு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று காலை முதலே பலத்த மழையும், அவ்வப்போது சாரல் மழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று மாலை தொடங்கி இரவு வரை விட்டு விட்டு பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை
இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஸ்டெல்லா, சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து விட்டதாக கூறினார். அந்த காற்றழுத்த தாழ்வுநிலை அரபிக்கடலுக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
வங்கக் கடலில் காற்றழுத்தம்
இலங்கைக்குத் தென்கிழக்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும்.
ராமேஸ்வரத்தில் அதிகமழை
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று காலை முதல் இன்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் அதிக பட்சமாக ராமேஸ்வரத்தில் 14 செமீ மழையும், செம்பரம்பாக்கம் 12 செமீ,சென்னை விமான நிலையம் 10 செமீ, சீர்காழி 10 செமீ காஞ்சிபுரம் 9 செ.மீ., வேதாரண்யம் 9 செமீ மழை அளவும் பதிவாகியுள்ளது என்றும் ஸ்டெல்லா கூறினார்.
விட்டு விட்டு பெய்யும் மழை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 30 முதல் தொடங்கி பெய்து வருகிறது. தொடக்கத்தில் கொட்டித்தீர்த்த மழையால் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இடைவெளி விட்டு மீண்டும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.