போடிமெட்டு அருகே பலத்த மழை... குடியிருப்புப் பகுதியில் வெள்ளம்… 8 இடங்களில் மண் சரிவு
தேனி: மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்த பலத்த மழையால் போடிமெட்டு அருகே உள்ள கொட்டக்குடி ஆற்றில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பலத்த சேதம் ஏற்பட்டது. மேலும் போடிமெட்டு சாலையில் 8 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடிமெட்டு பகுதியில் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கொட்டக்குடி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு தேனி பங்களாமேடு பகுதியில் முல்லைப்பெரியாற்றுடன் கலக்கிறது. போடியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணியளவில் கொட்டக்குடி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த ஆற்றில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றியிருந்த கிராமங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அப்போது, கொட்டக்குடி ஆற்றுப் பாலம் அருகே அமைந்துள்ள ஜவகர்நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் அதிகாலை 3 மணியளவில் தண்ணீர் புகுந்தது. வீடுகளில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென தண்ணீர் புகுந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்த பொதுமக்கள், வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீடுகளுக்குள் தவித்த பொதுமக்களை மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மில் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இந்தநிலையில் நேற்று காலை வெள்ளம் வடியத்தொடங்கியதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடாசலம் நேரில் பார்வையிட்டார். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்கும்படி நகராட்சி மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோல போடியை அடுத்துள்ள மரக்காமலை பகுதியிலும் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் வாழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அது மலையடிவார பகுதியில் உள்ள பூதிப்புரம் கிராமத்தில் தடுப்பு சுவர்களை உடைத்து விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
இந்த நிலங்களுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றின் வழித்தடமே மாறியது போன்ற நிலை உருவானது. மேலும் அங்குள்ள 3 கிணறுகளுக்குள் மண்ணும், கற்களும் தரைமட்ட அளவிற்கு சேர்ந்தது.தாழ்வான பகுதி என்பதால் விவசாய நிலத்தில் பெரிய அளவிலான கற்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கிணறுகளை தூர்வாரவும், விவசாய நிலத்தை சரிசெய்யகோரியும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண் சரிவு
இந்நிலையில், போடிமெட்டு மலை சாலையில் உள்ள புலியூத்து, மணப்பட்டி, காற்றாடிபாதை உள்பட 8 இடங்களில் அதிக அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மண் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.