தொடர் வடகிழக்குப் பருவமழை எதிரொலி - பாபநாசம் அணை சதம் அடித்தது
நெல்லை மாவட்டத்தில் கனமழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நெல்லை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையால் பாபநாசம் அணை 100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பாசன தேவையை பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் பூர்த்தி செய்து வருகிறது. பாபநாசம் அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் நெல்லை, தூத்துக்குடியில் அதிக அளவு மழை பெய்யும். வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து பாபநாசம் அணை கடந்த 5ம் தேதி திறக்கப்பட்டது. இந்தாண்டு பருவமழை தொடங்கியது முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் 20மிமீ, ஆய்க்குடியில் 5மிமீ, சேரன்மகாதேவியில் 19மிமீ, நாங்குநேரியில் 1மிமீ, பாளையில் 66மிமீ, சங்கரன்கோவிலில் 12மிமீ, செங்கோட்டையில் 6மிமீ, சிவகிரியில் 7மிமீ, தென்காசியில் 5மீமி மழையும் பதிவாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று நல்ல மழை பெய்ததால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 96 அடியிலிருந்து 98 அடியானது. இரவு இந்த நீர்மட்டம் மேலும் உயர்ந்து இன்று காலை 100 அடியை எட்டியுள்ளது. இந்த தகவல் விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்துள்ளது. பிற அணைகளான சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 112, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 77 என நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இந்த வருடம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பில் எந்த பிரச்னையும் இருக்காது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.