24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் எனவும் தெரிவித்தார். தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் கடந்த ஒருவாரகாலமாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று மாலை முதல் பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்வதால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இடியும் மின்னலுமாய் பெய்த கனமழைக்கு தியாகராயநகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து அதிகாலை 3 மணிவரை மின்சாரம் தடைபட்டது. அந்த பகுதிவாசிகள் விடிய விடிய இருளில் தவித்தனர்.
அடையாறு, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை,திருவல்லிக்கேணி, கிண்டி, நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட சென்னையின் பல முக்கிய பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையினால் ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளநீரை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
விடிய விடிய விடாமல் கொட்டிய மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தேங்கியுள்ள வெள்ளநீரை மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் அகற்றவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர்கள் ஆய்வு
இதனிடையே வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, மேயர் சைதை துரைசாமி ஆகியேரும் அதிகாரிகளும் பார்வையிட்டனர். மோட்டார் மூலம் தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கை அருகே
தென் கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருந்தது. அது நகர்ந்து இலங்கை மற்றும் தமிழகத்தையொட்டிய தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்துவருகிறது.
மழை நீடிக்கும்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும்.
அதாவது மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலவீனமடைய வாய்ப்பு
சனிக்கிழமை மழையின் அளவு குறையும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறாமல் பலவீனம் அடைந்துவிடும். வடகிழக்கு பருமழையின்போது தமிழ்நாட்டில் 44 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 27.5 செ.மீ. மழை பெய்துள்ளது. அதாவது 61 சதவீத மழை பெய்து இருக்கிறது என்று எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
மழை அளவு
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
பாபநாசம் 7 செ.மீ., நாங்குநேரி, ஆவடி தலா 6 செ.மீ., கோத்தகிரி, புழல், மாதவரம், எண்ணூர், சத்தியமங்கலம் தலா 4 செ.மீ., தரமணி, கொளப்பாக்கம், கெய்ட்டி, நாகப்பட்டினம், பவானிசாகர், குன்னூர், சென்னை விமானநிலையம், திருச்சி விமானநிலையம் தலா 3 செ.மீ. மேட்டுப்பாளையம், மயிலாடுதுறை, செட்டிக்குளம், அண்ணா பல்கலைக்கழகம், கோபிசெட்டிப்பாளையம், ஆயிக்குடி, மறந்தஹல்லி, கீழ் கோதையாறு, குமரப்பாளையம், வத்திராயிருப்பு, செங்கல்பட்டு, ராஜபாளையம், பெருந்துறை தலா 2 செ.மீ., கடலூர், பாம்பன், ஸ்ரீவில்லிபுத்தூர், தாம்பரம் உள்ளிட்ட 70 இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.