தமிழ்நாடெல்லாம் ஒரே வெள்ளம்.. எப்படி இருக்கிறாள் நம்ம மலைகளின் "ராணி"... ?
சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
ஊட்டி: மலைராணி எப்பவுமே குளுகுளு என்றுதான் இருப்பாள். இப்போ கேட்கவே வேணாம். நீலகிரியே கூல்..கூல்..தான்! ஜில்..ஜில்..தான்!
தமிழகமே தற்போது குளிர்ந்து காணப்படுகிறது. பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதில் நீலகிரியும் ஒன்று.
நீலகிரியின் ஒட்டுமொத்த சொத்தே அதன் இயற்கைதான். எங்கு திரும்பினாலும் பசுமையும், வனங்களின் வனப்பும், இயற்கையின் குளுமை நிறைந்த நீலகிரியில் மழை விடாது பெய்து வருகிறது. "ச்சோ" வென்ற மழை சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. கூடவே பலத்த காற்று சூறாவளியாக அடித்து மிரட்டி விட்டு போய் கொண்டிருக்கிறது.
கட்டமைப்பு வசதி
எவ்வளவு மழை பெய்தாலும் நீலகிரி சாலைகளில் தண்ணீர் மட்டும் தேங்கி நின்றதாக வரலாறே கிடையாது. எல்லா நீரும் ஓடிப்போய் பைகாரா நீர்வீழ்ச்சியில் கலந்துவிடுவது போன்ற ஒரு கட்டமைப்பு பிரிட்டிஷ் காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வளவுதான் பேய் மழை பெய்து வெள்ளம் ஓடினாலும் அவை வீணாவது கிடையாது... அனைத்து துளிகளும் சேமிப்பில்தான் போய் ஏரிகள், பைகாராவில் விழுகின்றன என்பது ஆறுதலான, மகிழ்ச்சியான செய்தி! அந்த வகையில் ஒரு நிம்மதி.
மண்சரிவு
அதேபோல இவ்வளவு மழை பெய்தும் மண் சரிவும் பெரிதாக ஏதும் நடக்கவில்லை. கடந்த வருடம் காட்டிலும் இந்த வருடம் மண் சரிவு குறைவுதான். ஆனால் மரங்கள்தான் பொத் பொத்தென்று நடுரோட்டிலேயே விழுந்து விடுகின்றன. இதனை நகராட்சி ஊழியர்கள் சீர்செய்து முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. மரங்களை அகற்றும் பணியில் இறங்கிவிட்டால் மாவட்டம் முழுவதும் கரண்ட் கட்தான். எங்கு மரம் விழுந்தாலும் கரண்ட் அதோகதிதான். மரங்களை அகற்றும்வரை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு விடுகிறது.
செருக்கோடு கொட்டும் அருவி
இப்போது ஊட்டியில் சீசன் கிடையாது. அதானல் சுற்றுலா பயணிகள் வருகை குறைவுதான். இங்கு கல்லட்டி எனும் அருவி உள்ளது. முன்பெல்லாம் இந்த அருவியில் நன்றாக தண்ணீர் கொட்டும். அதனால் சினிமா ஷூட்டிங் எல்லாம் இந்த அருவியில் எடுத்திருக்கிறார்கள். அதன்பின்பு இந்த பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் எனகூறி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுத்துவிட்டனர். அதன்பிறகு போதிய தண்ணீரும் அருவியில் விழவில்லை.
வீணாகாத மழைநீர்
இந்த அருவியில் தண்ணீர் கொட்டி எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டதாம். ஆனால் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இந்த அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பெருக்கெடுக்கும் நீரோ அருவியிலிருந்து கொட்டுகிறது. அருகில் செல்ல அனுமதி இல்லாவிட்டாலும் சுற்றுலா பயணிகளாட்டும், நீலகிரிவாசிகளாகட்டும், இந்த அருவியின் தண்ணீரை செல்போனில் படம் பிடித்து வைத்து கொள்கின்றனர். யார் நம்மை படம் பிடித்தால் என்ன என்று, கல்லட்டி அருவி நீர் பெருக்கெடுத்து செருக்கோடு ஓடிக் கொண்டே இருக்கிறாள்.