தென்காசி சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை... சில் கிளைமேட்டால் மக்கள் குஷி!
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று பலத்த மழை பெய்தது.
தென்காசி: தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இதனால் நீர் நிலைகள் வறண்டு போயுள்ளன.
சென்னை, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தலையை வெளியே காட்ட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் மக்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.
வெயிலின் தாக்கத்தால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்துவருகிறது.
இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்கிறது. செங்கோட்டை, குற்றாலம் ஆகிய நகரங்களிலும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி வருகிறது.
இதனால் பல இடங்களில் வெப்பம் தணிந்து சில்லென குளிர் காற்று வீசி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.