புதுவையில் சூறைக்காற்றுடன் ‘பேய்’ மழை... 14 வீடுகள் சேதம்
புதுவை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தைப் போலவே புதுவையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன் தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கடந்த ஞாயிறு முதல் மழை தீவிரம் அடைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு கிழக்கு, தென்கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இரவு 7.30 மணி அளவில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததையொட்டி சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டியது. தமிழகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், வட கடலோர மாவட்டங்களிலும் இரவு விடிய, விடிய பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கனமழை...
இதேபோல், புதுவையிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென ஓடியது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அஞ்சினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்சாரம் துண்டிப்பு...
பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், ஆங்காங்கே மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் விழுந்தன. சில இடங்களில் மரங்கள் விழுந்ததால் வாகனங்களும் சேதமடைந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
போக்குவரத்து பாதிப்பு...
தாவரவியல் பூங்காவிலும் பல மரங்கள் சாய்ந்தன. உழவர்சந்தை கடைகள் மீது ஒரு மரம் ஒன்று முறிந்துவிழுந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மரங்கள் விழுந்ததால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த பொதுப் பணித்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் மரங்களை அப்புறப்படுத்தினர்.
மீட்புப் பணி...
மரங்கள், மின் கம்பங்கள் போலவே கடைகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள், பெயர்ப்பலகைகள் போன்றவையும் சூறாவளிக் காற்றில் தூக்கி வீசப்பட்டன. இது தொடர்பான பகுதிகளில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களும், அரசியல் பிரமுகர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் இணைந்து ஈடுபட்டனர்.
குளம் போல் தேங்கியது...
கனமழை காரணமாக புதுவையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக பூமியான்பேட்டை, பாவாணர் நகர், ரெயின்போ நகர், மொட்டைத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்திராகாந்தி சிக்னல் உள்ளிட்ட பல்வேறு சாலை சந்திப்புகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இந்த மழைநீரில் சிக்கிய இருசக்கர வாகனங்களின் என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்து இயக்கம் நின்றுபோனது. இதனால் இருசக்கர வாகனங்களை வாகன உரிமையாளர்கள் பலர் தள்ளியபடியே சென்றனர்.
அதிகளவு மழை நீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்ற பொதுப்பணித்துறையினர் மோட்டார்கள் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றினர். கழிவுநீர் வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்புகளும் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
கடல் சீற்றம்...
காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் கடலும் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியதை, புதுவை மக்களும், சுற்றுலா பயணிகளும் நேரில் கடற்கரைக்கு வந்து பார்த்துச் சென்றனர். புதுவை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக அரசுப்பள்ளிகளும், சமுதாய நலக்கூடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒருசிலர் வந்து தங்கினார்கள்.
வீடுகள் சேதம்...
இருளன்சந்தை கிராமத்தில் 2 வீடுகளும், மணப்பட்டு கிராமத்தில் ஒரு வீடும், நெட்டப்பாக்கத்தில் 5 வீடுகளும், மடுகரையில் ஒரு வீடும், கோர்க்காடு பகுதியில் 5 வீடுகளும் என 14க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.