தொடரும் கனமழை: பாபநாசம் அணை கிடுகிடு உயர்வு
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து கனமழை நீடிப்பதால் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து பாபநாசம் அணைப்பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.
சென்னையில் அடையாறு, வடபழனி, கிண்டி, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு 9 மணியளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மரம் விழுந்து விபத்து
கனமழையின் காரணமாக ஆழ்வார்பேட்டை அருகே மாநகரப்பேருந்து மீது மரம் விழுந்ததில், ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீர் மழையினால், அலுவலகம் முடித்துவிட்டு இருசக்கர வாகனங்களில் வீடுகளுக்கு திரும்பியோர் நனைந்தபடியே செல்ல நேர்ந்தது.
தென்மேற்குப் பருவமழை
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலமாகும். இந்த மழை சுமார் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் பருவ நெல் சாகுபடி செய்யப்படும். ஆனால் இந்தாண்டு பருவமழை சரியாக பெய்யாததால் கார் பருவ சாகுபடி நடைபெறவில்லை.
மேற்கு தொடர்ச்சி மலையில்
இந்த நிலையில் பருவ மழை காலம் முடிந்த நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாபாநாசம் அணை
பாபநாசம் அணையில் 93.45 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 95.10 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 2 ஆயிரத்து 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 105.97 அடியாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் விரைவில் பாபநாசம் அணை நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறைந்த குண்டாறு
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி விட்டது. இந்த அணையின் நீர்மட்டம் 36.10 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
நீர்மட்டம் உயர்வு
அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 112.50 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 113 அடியாக உயர்ந்துள்ளது.
தற்போது அணைப்பகுதிகளில் மழை இல்லை. எனினும் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கனமழை நீடிப்பு
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், கொடைக்கானலிலும் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதனால், சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெப்ப சலனம் காரணமாக மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.