ராசிபுரத்தில் திடீரென காற்றுடன் கனமழை… குளு குளு மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
ராசிபுரத்தில் திடீரென காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலில் வாடியிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராசிபுரம்: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப சலனத்தால் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவது கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி தமிழக மக்களை வெப்பம் துன்புறுத்தி வருகிறது.
வெப்பக் காற்று
இன்னும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்தார். இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மழை
அதே நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உள் மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
காற்றுடன் கனமழை
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று மாலை ராசிபுரத்தில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடும் வெயிலால் வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில் இந்த திடீர் மழையால் பூமி குளிர்ந்து வருகிறது.
மக்கள் மகிழ்ச்சி
வெயில் வறுத்தெடுத்து வந்த நிலையில் நல்லக் காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை என்றாலும் குளிர் காற்று வீசி கனமழையும் பெய்து வருவது பொதுமக்களுக்கு தற்காலிகமாக வெயிலில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது.