சென்னையில் திடீரென குறைந்த வெயில்.. கும்மிடிப்பூண்டியில் கன மழை...!
சென்னை: சென்னயைில் இன்று பிற்பகலுக்கு மேல் பெரும்பாலான பகுதிகளில் திடீரென வெயில் அடியோடு குறைந்து விட்டது. படு புழுக்கமாக இருந்து வருகிறது. இதனால் மழை வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டுள்ளனர்.
அதேசமயம், சென்னைக்கு அருகே கும்மிடிப்பூண்டியில் சுமார் அரை மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்ததால் அப்பகுதியில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.
இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கியதிலிருந்தே அனல் பறந்து வருகிறது. சராசரியாக 100 டிகிரியைத் தாண்டி பெரும்பாலான பகுதிகளில் வெளுத்து வாங்குகிறது வெயில்.
தற்போது அக்னிநட்சத்திரம் வேறு தொடங்கி விட்டதால் வெயில் கடுமையாகவே இருக்கிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. வெப்பச் சலனம் காரணமாக இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அது கூறியிருந்தது.
இந்தப் பின்னணியில் கும்மிடிப்பூண்டியில் இன்று பிற்பகலுக்கு மேல் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பேய் மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. இதனால் அப்பகுதியில் புழுக்கம் அடியோடு குறைந்தது.
அதேசமயம் சென்னையில் 3 மணிக்கு மேல் வெயில் அடியோடு குறைந்தது. புழுக்கம் அதிகரித்தது. லேசான காற்று வீசி வருகிறது. இதனால் மழை வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
இதற்கிடையே ஊட்டியில் 1 மணி நேரமாக பலத்த மழை பெய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.